Tuesday, 11 April 2017

ஆரைக்குளம் மலையாண்டி சாஸ்தா

இதோ சபரிமலை சீஸன் ஆரம்பமாகப் போகிறது. ‘கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை’ என்ற சரண கோஷம் உங்கள் காதுகளில் எல்லாம் ஒலிக்கப் போகிறது. அந்தக் கல், முள் ஆனந்த அனுபவம் சபரிமலை போனால்தான் கிடைக்கும் என்பதில்லை. நம் தமிழகத்திலேயே தூத்துக்குடி அருகில் உள்ள ஆரைக்குளம் மலையாண்டி சாஸ்தா கோயிலுக்குச் சென்றாலும் கிடைக்கும்.

பக்தர்கள் பலருக்கும் ஓர் ஐயம் இருக்கும். சபரிமலையில் பிரம்மச்சாரியாக இருக்கும் ஐயப்பன், நம் ஊரில் மட்டும் திருமணம் ஆனவராக, அதுவும் இரண்டு மனைவிகளுடன் காட்சி தருவது ஏன் என்ற சந்தேகம்! அது தவிர ஐயப்பனுக்கு ஒரு மகனும் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா?

அந்த சந்தேகங்கள் தௌ£வதற்கு முன்பாக, மலையாண்டி சாஸ்தாவை தரிசனம் செய்து விட்டு வரலாமா?

தூத்துக்குடியிலிருந்து கோவில் பட்டி செல்லும் சாலையில் 30 கி.மீ. தொலைவில் உள்ள ஆரைக்குளம் கிராமத்தில், செம்மண் மலையின் மீது அமைந்திருக்கிறது மலையாண்டி சாஸ்தா கோயில். தொலைவிலிருந்து பார்த்தாலே மலையும், கோயிலும் கொள்ளை அழகுடன் காட்சியளிக்கிறது. அய்யனை மனதில் துதித்துக் கொண்டே, இரண்டு கி.மீ. நடக்க வேண்டும். கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை!

இதோ மலை மீது மூச்சு வாங்க ஏறி வந்து விட் டோம்!

காவி பூசப்பட்டு கம்பீரமான மதிற்சுவர்களுடன் காட்சியளிக்கும் கோயிலின் முன்னால் ஒரு சிறிய மேடை யில் இரண்டு ஸ்தூபிகள் அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

வித்தியாசமாகக் காணப்படும் அதற்கும் இந்தக் கோயிலுக்கும் என்ன சம்பந்தம்?

அருகிலிருக்கும் உள்ளூர்க்காரர்கள் கந்தசாமி, முத்துராமலிங்கம் ஆகியோரிடம் கேட்டபோது, அது ஒரு காதல் கல்வெட்டு என்பது புரிந்தது. காதல் தாஜ்மஹால்!

இதோ அந்தக் கதை!

மணிக்கட்டித் தேவர் என்பவர் இந்த ஊர்க்காரர். அவருக்கு முத்தம்மா என்ற பெண் ணின் மீது காதல்.

முத்தம்மா வேறு ஜாதியைச் சார்ந்தவள். அண்ணன், தம்பி ஆறு பேருடன் பிறந்தவள்.

காதலை ஜாதி தடுத்தது. தடுக்கத் தடுக்கத் தானே காதல் வளரும்!

எல்லாக் காதலர்களுக்கும் வரும் அதே ஐடியா, அவர்களுக்கும் தோன்றிற்று. ஆம். ஊரை விட்டு ஓடி விடலாமா?

சுப யோக... இல்லை. சுபமும் யோகமும் இல்லாத நேரத்தில் காதலர்கள் ஊரை விட்டு ஓடினார்கள். அவர்கள் ஓடி ஒளாந்த இடம் மலையாண்டி சாஸ்தா கோயில் இருக்கும் மலைப் பகுதி. அப்போது இந்த மலை அடர்ந்த காடாக இருந்தது. ஒளாந்தால் யாராலும் கண்டுபிடிக்க முடியாத வனம்.

முத்தம்மாவின் சகோத ரர்கள் கடும் ஆத்திரத்துடன் மணமக்களைத் தேடினார்கள். அவர்களின் கோபம் கொலைவெறியாக மாறியிருந்தது.

தெய்வீகக் காதலர்களாக இருந்தாலும், சோறு சாப்பிட்டாக வேண்டுமே? காட்டில் கிடைத்த காய்களை வைத்து முத்தம்மா ஏதோ உணவு தயாரிக்க, அதனால் எழுந்த புகை, ஊருக்குள் இருப்பவர்களிடம் இவர்களை காட்டிக் கொடுத்தது. புகை.....பகை!

காதல் எதிரிகள் கைகளில் ஆயுதங்களுடன் மலைக்காட்டுக்குள் புகுந்தார்கள்.

காதலர்களைத் தேடிப்பிடித்து, வெட்டிச் சாய்த்து... முத்தம்மா சமைத்த அரிசியே,வாய்க்கரிசியாக மாறிப் போனது.

காதலர்கள் மறைந்தாலும், அவர்களின் நினைவாக அந்த ஸ்தூபிகள் மட்டும் யாருடைய தொந்தரவும் இல்லாமல் ஒன்றாகவே எப்போதும் இருக்கிறது.

இதோ இப்போது கோயிலுக்குள் நுழை வோமா?

நுழைவதற்கு முன்னால் முக்கியமான ஒரு விஷயம். நீங்கள் இந்தக் கோயிலுக்கு வருவதாக இருந்தால், சும்மா மலையேறி வந்து விடாதீர்கள். கோயில் பூட்டித்தான் இருக்கும். அதனால் ஆரைக்குளம் கிராமத்திலேயே தபால்காரர் வீட்டில் சாவி வாங்கிக் கொள்ள வேண்டும். அவர்கள் யாரையாவது கூட அனுப்புவார்கள். இதை மறந்து விடாதீர்கள். மறந்தால் 2 கி.மீ. மீண்டும் நடக்க வேண்டும். ஜாக்கிரதை.

கருவறையில் தேவிகள் பூரணா, புஷ்கலாவுடன் யானை வாகனத்தில் அமர்ந்தபடி கம்பீரமாகக் காட்சியளிக்கிறார் மலையாண்டி சாஸ்தா. முக்குலத்தோருக்கான பரம்பரை தெய்வம் இவர்தான். 80 கிராம மக்களை மலையில் இருந்தபடியே மகிழ்ச்சி பொங்க வைப்பதாலோ என்னவோ தானும் மகிழ்ச்சியாக, புன்னகை தவழக் காட்சியளிக்கிறார் ஐயன்.

“பங்குனி உத்திரத்தன்னிக்குப் பாக்கணும் கூட்டத்தை. 80 கிராமத்து முக்குலத்தோரும் திருவிழா மாதிரி வந்து கூடுவாங்க. இந்த மலையே அன்னிக்குப் பக்தர்களாலே நிரம்பியிருக்கும். உலகத்துல எந்த ஊர்ல இருந்தாலும் கிராமத்து மக்கள் எல்லாரும் அன்னிக்கு இங்கே வந்து சேர்ந்திடுவோம்’’ பரவசத்துடன் கூறும் சினிமா டைரக்டர் டி.பி. கஜேந்திரன், ”மலையாண்டி சாஸ்தா கோயிலுக்கு பக்தர்கள் வரதுக்கு வசதியா சாலை வசதியும், குடிதண்ணீர் வசதியும் அரசாங்கம் செய்து கொடுத்தா ரொம்ப நல்லா இருக்கும். இந்த இடம் வனத்துறையின் ¢கட்டுப்பாட்டில் இருப்பதால் அரசு கொஞ்சம் மனது வைக்கவேண்டும்“ என்கிறார்.

கருப்பசாமி, பேச்சியம்மை, இருளப்பர், காக்காச்சி, ராக்காச்சி ஆகியோரும் இந்த மலைக்கோயிலில் அருள்பாலிக்கிறார்கள்.

சாஸ்தா சன்னதிக்குப் பின்னால் இருக்கும் இரண்டு மரங்களை மட்டும் பார்க்காமல் வந்துவிடாதீர்கள். முடிந்தால் அதன் இலைகளில் இரண்டையாவது எடுத்து வாயில் போட்டுக் கொள்ளுங்கள். அந்த இலைகளைத் தின்றால் தீராத நோய்களெல்லாம் தீருமென்பது நம்பிக்கை.

அதற்கும் ஒரு கதை இருக்கிறது. பல வருடங் களுக்கு முன்பு, இருளப்பசாமிக்குப் பொங்கல் வைக்க ஒரு குடும்பம் இங்கே வந்திருந்தது. அப்போது கடும் மழை. சாமி கும்பிட்டுவிட்டு, வீடு திரும்பும்போது,, பொங்கல் கிண்டிய அகப்பையையும் துடுப்பையும் இங்கேயே நட்டுவைத்துவிட்டுச் சென்றார்கள். மறுநாள் இருளப்பசாமியின் அருளால், அவையிரண்டும் துளிர் விட்டு மரமாக மாறியிருந்தன. அன்று முதல், இந்த மரத்தையும் மக்கள் வழிபட ஆரம்பித்தார்கள்.

சரி, சபரிமலையில் திரு மணம் ஆகாதவராக இருக்கும் ஐயப்பனுக்குத் தமிழகத்தில் மட்டும் இரண்டு மனைவிகள் வந்த கதையை இப்போது பார்க்கலாமா?

கயிலாயம்

முதல்முதலில் ஐயப்பன் இருந்தது கயிலாயத்தில்தான். விநாயகர், முருகன் ஆகியோரோடு அவரும் ஒருவராக இருந்து வந்தார். அவர் எப்படி சபரிமலை வந்தார்? முதலில் கயிலாயத்திற்குப் பக்கத்திலுள்ள நேபாளத்திற்குப் போகலாமா?

நேபாளம்

நேபாளத்தை அப்போது பளிஞன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் ஒரு கை தேர்ந்த மந்திரவாதியும் கூட. ஆனாலும் நல்லெண்ணம் படைத்தவன்.

அவனது ஒரே ஆசை 1000 ஆண்டுகள் வாழ வேண்டும் என்பதுதான். அதற்கு என்ன செய்வது?

கன்னிப் பெண் ஒருத்தி யைக் காளிக்குப் பலி கொடுத் தால் எண்ணம் நிறைவேறும் என்றது அவனது மந்தி(ர) புத்தி.

குறிப்பிட்ட தகுதி களுடன் ஒரு பெண் தேர்ந் தெடுக்கப்பட்டாள்.

நரபலிக்கு நாள் குறிக்கப்பட்டது.

எல்லாம் பார்த்த மன்னன் ஒன்றை மட்டும் மறந்துவி¢ட்டான். அந்தப் பெண் தீவிரமான சிவ பக்தை என்பதை.

1000 ஆண்டுகள் வாழ மன்னன் அவளைப் பலியிடத் துடிக்க, அவளோ தன் உயிர் பிழைக்க சிவனைக் கும்பிட்டாள்.

பார்த்தார் சிவன். ஐயப்பனை அழைத்தார். பக்தையைக் காப்பாற்றுமாறு அனுப்பிவைத்தார்.

விரைந்தார் ஐயப்பன். அவரைப் பார்த்ததுமே ஆடிப்போய்விட்டான் மன்னன்.

அப்புறம்? பக்தை காப்பாற்றப்பட்டாள்.

மனம் மாறிய மன்னன், தன் மகளையே ஐயப்பனுக்கு மணம் முடித்து வைத்தான். மகளின் பெயர் புஷ்கலா!(ஐயப்பனுக்கும், புஷ்கலாவுக்கும் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அதன் பெயர் சத்யகன்!)

கொச்சி

அந்தக் காலத்தில் கொச்சியை ஆண்ட ராஜா, பஞ்சகன். அவன் சிறந்த ஐயப்ப பக்தன். வேட்டைப் பிரியனும் கூட.

ஒரு நாள் ராஜா வேட்டைக்குக் கிளம்பினான். வழி தவறி, நடுக்காட்டைத் தாண்டி, பூதங்கள் வாழும் பயங்கரமான பகுதிக்குச் சென்றுவிட்டான்.

பூதங்கள் அவனைச் சூழ்ந்து கொண்டன. அலறினான் மன்னன். தப்பிக்க வழியே இல்லை.

ஐயப்பன்தான் ஒரே கதி என்பது புரிந்து, “ஐயப்பா” என்று கதறினான் ராஜா.

அதேதான். சாஸ்தா, புலியின் மீது பறந்து வந்தார். ராஜாவைக் காப்பாற்றி னார். அப்புறம்? அந்த ராஜாவுக்கும் ஒரு மகள் உண்டு. பூரணா!

டும் டும் டும்!

பூரணாவை சாஸ்தா மணந்ததைக் கண்டு உள்ளம் கொதித்தான் ஒரு மந்திரவாதி. புரியவில்லையா? புஷ்கலாவின் தந்தையான பளிஞன் தான் அது.

ஆத்திரம் அடங்காத அவன், சாஸ்தாவைப் பார்த்துச் சாபமிட்டான்: “நீ ஒரு மனிதனாகப் பிறக்க வேண்டும். இரண்டு பெண்களை இப்போது மணந்த நீ, மனிதனாக, திருமணமே செய்துகொள்ளாமல் பிரம்மச்சாரியாக இருப்பாயாக!’’

சாஸ்தாவும் அந்த சாபத்தை ஏற்றுக்கொண்டார். ஐயப்பனாக அவதரித்தார்.

ஆரைக்குளம் சாஸ்தாவை வழிபட்டுவிட்டு, அந்த மலை உச்சியில் ஒரு நிமிடம் கண்களை மூடி நின்று பாருங்கள். பூரணா, புஷ்கலா சமேத சாஸ்தா மட்டுமல்ல, அவர்களது மகன் சத்யகனும் உங்களுக்கு மானசீகமாக ஆசி புரிவான்!.





No comments:

Post a Comment